Sunday, August 17, 2014

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

அகந்தை வடிவாம் கம்சன் என்னும்
அரக்கனால் சிறை வைக்கப்பட்ட
வசுதேவர் தேவகி போன்ற
ஆன்மாக்களை விடுவிக்க காண்போர்
உள்ளம் மகிழும் கண்ணனாய்




சிறையில் வந்துதித்த நாரணனே





உனக்கு வணக்கம்


ஒருத்திமகனாய்ப்  பிறந்தாய்
ஓரிரவில் ஒருத்தி மகனாய்
கோகுலத்தில் ஒளிந்து வளர்ந்தாய்
அதுபோல் இவனுள்ளத்திலும்
ஒளிந்துகொண்டாய் ஏன்
இன்னும் வெளிப்படாமல் இருக்கின்றாய் ?



ஆவினங்களை மேய்த்தாய்
கள்ளமில்லா ஆயர்குல மக்களுடன்
கலந்து உறவாடி  மகிழ்நதாய்





வெண்ணையை உண்டாய்





கோகுலத்து மாதரிடம் லீலைகள் செய்தாய்
வெள்ளையான மனம் இருந்தால்
வேங்கடவா உன் அருள் பெறலாம்
என்பதை அன்றே காட்டினாய்





அண்டமெல்லாம் உன்னில் அடக்கம் என்று
அனைவருக்கும் காட்டிடவே
மண்ணையும் உண்டாய் முன்பொருநாள்
மண்ணையும் விண்ணையும்
அளந்த எம்பிரான் என்றென்றும்
எமைக் காத்திட வாராய் இந்நாளில்


நஞ்சைக் கக்கி ஆயர்களை துன்புறுத்திய  
காளிங்கன் என்னும் நச்சுப் பாம்பை அடக்கிவைத்தாய்
அதுபோல் அகந்தை  என்னும் அரவத்தால்
அல்லல்படும் இவனையும் ஆட்கொள்ள வாராய்




எல்லாம் உனதாய் இருக்க அனைத்தும் தனதென்று 
ஆணவத்துடன் அலைந்த திரிந்த  கௌரவர் கூட்டத்தை
ஒழித்தாய். நீயே கதியென்று உன்னைச் சரணடைந்த
பாண்டவர்களின் பக்கம் நின்றாய்.

அஞ்ஞானம் ஒழிந்திட ஆனந்தம் மலர்ந்திட
அற்புதமாய் கீதையை அளித்தாய்
உன்னை போற்றி துதித்து உய்ய ஆயிரம்
நாமங்கள் எங்களுக்கு அளித்தாய்

கண்ணா உன் பெருமை அளவிடலாமோ!
கண்ணா உன் கருணைக்கு நிகருண்டோ!


காலமெல்லாம் உன் புகழ் பாடுவேன்
எந்த பிறவி எடுத்தாலும் உன் காலடியில்
என்றென்றும் கிடப்பேன் உன்னோடு
அயிக்கியமாகும் வரை

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  (ஓவியங்கள்-தி ரா பட்டாபிராமன்)

No comments:

Post a Comment