Wednesday, January 8, 2014

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(27)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(27)



பாடல்-27

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா 
உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு 
யாம்பெறு சம்மானம் 
நாடு புகழும் பரிசினால் நன்றாக 
சூடகமே தோள்வளையே தோடு செவிப்பூவே 
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் 
ஆடை உடுப்போம் அதன்பின்னே பால் சோறு 
மூட நெய் பெய்து  முழங்கை வழிவாரக் 
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் 


விளக்கம் 

ஜீவாத்மாவாகிய உயிர்கள்
 பரமாத்மாமிடமிருந்து மாயை  வசப்பட்டு 
பிரிந்து வந்துவிட்டது .

வந்தது மட்டுமல்லாமல் புலனின்பங்களை
 நாடி அதிலேயே மூழ்கிபோய் 
இன்ப துன்பங்களில் சிக்கிக்கொண்டு 
தான் யார் என்பதையே மறந்துவிட்டது. 

மீண்டும் வினைகளை அனுபவிக்க 
பிறப்பதும் மீண்டும் மரணம் என்னும்
 உறக்கத்தில் ஆழ்வதும் 
நீண்ட உறக்கத்தில் ஆழ்வதுமாகி 
துன்பப்படிருக்கும் ஆன்மாக்களை


ஆண்டாள் எழுப்பி அவர்களின் 
உண்மை நிலையை அறிய செய்து
 இந்த சுழலிலிருந்து விடுபடும்
 வழியைக் காட்டி அருளினாள்

அப்படி இறைவனுடன் கூடாமல் 
அழியும் உயிர்களோடு கூடி கிடக்கும்
 உயிர்களின் அறியாமையை அழித்து 
நற்கதியை தந்து உயிர்களைக் 
கடைதேற்றுபவன் கோவிந்தன் 



அப்படிப்பட்ட கருணாமூர்த்தியான 
திருவேங்கடவனே 
உன் புகழைப் பாடி பரவுவதால் 
உன் அருள் கிட்டுமாகையாதலால் 
நாங்கள் நன்றாக அலங்கரித்துக்கொண்டு
 புத்தாடை உடுத்திக்கொண்டு 
கோகுலத்து வள்ளல் பெரும் பசுக்கள் தந்த
 பாலில் நெய் சேர்த்து அமுது  செய்து 
அனைவரும் கூடி உண்டு இன்புறுவோம். 

 

உயிர்கள் உறவுகளோடு கூடி 
அன்பால் இணைந்து இன்புற்று வாழ வேண்டும்.

 இருந்தும் அந்த இன்பம் நிலையற்றது. 

 நிலைத்த இன்பம் பெறவேண்டுமானால் 
ஜீவாத்மாவும் பரமாத்வாவாகிய அரங்கனுடன் கூடி 
மீண்டும்பிறவா நிலை எய்தி என்று 
அழியா இன்பம் பெறவேண்டும்.

அதற்கு தான் என்ற 
அகந்தையை விட்டுவிட்டு இவ்வுலக நினைவுகளை விடுத்து எப்படி பாரதப்போரில் அர்ஜுனன் தேரை கண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு தன்னுடைய செயல்களை செய்தானோ அதுபோல் நாமும் நம்முடைய மனதை பகவானிடம் ஒப்படைத்துவிட்டால் அவன் நம்மை கண் போன்று அனைத்து ஆபத்துகளிலும்  காப்பாற்றுவான் என்பது சத்தியம். 


ஓம் நமோ பகவதே வாசுதேவாய  

4 comments:

  1. இன்பத்தைப் பற்றிய விளக்கமும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு. நம்மைக்காக்கும் பெருமாளையே வரைந்துள்ள அண்ணாவின் பெருமை அதைவிட அருமை. பாராட்டுக்கள், அண்ணா.

    ReplyDelete
  3. சற்றே தலை கிரீடம் சாய்ந்துள்ளது. இருப்பினும், என் கோரிக்கைகளை அவர் செவி சாய்ப்பதாகவே அது எனக்குத் தோன்றியது. ;)))))

    ReplyDelete
    Replies
    1. பகவான் நம் குறைகளை தன் சிரசை சற்று சாய்த்துத்தான் செவி மடுக்கிறான் கேட்கிறான்உங்கள் ஊகம் சரியே

      Delete