Saturday, December 21, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-6)-தொடர்ச்சி

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-6)-தொடர்ச்சி 


புள்ளும் சிலம்பின காண்  என்று தொடங்கும் 
இந்த பாசுரத்திற்கு விளக்கம் கூறுபவர்கள்.
 பறவைகள் எழுந்துவிட்டன. 


கருடன் என்னும் பறவையை 
வாகனமாக உடைய அரங்கன் 
உறையும் கோயிலில் 
அவன் கையில் உள்ள சங்கம் 
ஒலிக்கும்ஒலியைக்  கேட்டும் 
இன்னும் உறங்குகிறாயே எழுந்திரு.
 
முனிவர்களும் யோகிகளும் ஹரி என்று 
மெல்ல அழைக்கும் சத்தம்  உன் காதில் கேட்கவில்லையா
 என்று ஆண்டாள் கூறுவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் காலம்காலமாய். 

வள்ளுவர் தன் குறளில் கூறுகின்றார் 
இந்த உடலுக்கும் உயிருக்கும் என்ன நட்பு 
என்ற கேள்விக்கு பறவைக்கும் 
அது வசிக்கும் கூட்டிற்கும்  
உள்ள தொடர்பு அவ்வளவே என்கிறார்.

அப்படியானால் இந்த உயிர் 
ஒரு புள்ளைப் (பறவையைப்)போன்றது 
என்று பொருள் கொள்ளவேண்டும். 
அது உடலாகிய இந்தக் கூட்டில் வசிக்கிறது. 

இந்த உயிரின் உள்ளத்தில் 
இதயாகாசத்தில் ஆன்மாவாகிய 
இறைவன் உறைகின்றான். 

அதைத்தான் ஆண்டாள் புள் (உயிர்) புள்ளரை ,
புள்ளறையன் (உயிரின் இதயத்திலே உறைபவன்) 
கோயில் என்று தெரிவிக்கின்றாள் 

வெளிய பறக்கின்ற பறவைகள்(புள் )
சிலம்பின காண் சப்தங்களை  எழுப்பிவிட்டன.
 உள்ளே இருக்கின்ற 
புள் உயிர் இன்னும் உறங்கலாமோ?
விழித்துகொள்ளுங்கள்  என்கிறாள் 

எதற்கு?

உள்ளத்தின் உள்ளே உறைகின்ற 
வாசுதேவன்  என்னும் இறைவனாகிய ஆத்மா 
உள்ளே இருப்பதால்தான் இதயம் துடிக்கிறது, 
மூச்சுக்காற்று வந்து போய்க் கொண்டிருக்கிறது.
 தொடர்ந்து சத்தம் எழுப்பிக்கொண்டிருக்கிறது .
அந்த சத்தம் காதில் கேட்கவில்லையா என்கிறாள்.
அதைதான் வெள்ளை விளி சங்கின் பேரரவம் என்று கூறுகிறாள். 

மேலும் அவள் கண்ணனுக்குதேவகி 
என்னும் பெற்றெடுத்த தாயும், யசோதை
என்னும் வளர்ப்புத் தாயும் அமிர்தமான 
தாய்ப்பாலை அளித்தனர். 

ஆனால் பூதகி என்பவளோ நச்சுப்பாலை 
அளித்து கண்ணனை கொல்லத் துணிந்தாள் 

.மனிதரெல்லாம் தாய்ப்பாலை உண்டு வளர்ந்தனர். 
ஆனால் இந்த புலன்களோ மனிதர்களுக்கு
 நஞ்சை ஒத்த உலக விஷயங்களை அளித்து 
கண்ணனை மறக்கடிக்க செய்துவிட்டன. 

பூதகியை அழித்து ஒழித்ததுபோல் 
நாம் கண்ணனிடம்  சரணடைந்தால் நம்மையும் 
உலக மோகங்களிருந்து நம்மை காப்பாற்றுவான்

பாற்கடலில் பாம்பணை  மேல் 
பள்ளிகொண்ட பரந்தாமன் 
அவனை சிந்தனை செய் என்கிறாள் ஆண்டாள். 


அவன்தான் அனைத்து படைப்புகளுக்கும் 
விதை போன்றவன் ,அதாவது வித்தாவான் என்கிறாள்

அவனை அறி ,அறி என்று உணர்த்தும் வகையிலே 
ஹரி ஹரி என்று அழைக்கும் முனிவர்கள் 
மற்றும் யோகிகளின் குரல் 
உன் காதில் விழவில்லையா என்று 
தோழிகளை பார்த்து கேட்கிறாள் .


இறைவன் வெளியில் இல்லை
நம்முடைய இதயத்தின் அறைக்குள்தான்  
இருக்கின்றான் என்பதை உணர்ந்து 
அவன் நம்மை அழைப்பதை உணர்ந்து  
கொள்ளவேண்டும் என்பதே 
இந்த பாசுரத்தின் சாரம். 

4 comments:

  1. மோட்சம் பெறும் வழியினைக் கூறி வருகின்றீர்கள்! இறையின் மாண்பினையும் மனித மனம் மாறவேண்டும் என்பதனையும் ஒவ்வொரு பாடலின் கருத்துரையிலும் வலியுறுத்தி வருவது பாராட்டத் தக்கது! அருமை அய்யா!

    ReplyDelete
  2. புள்ளும் சிலம்பின காண் ....

    ஆஹா அருமையான பாசுரம் + இனிமையான விளக்கங்கள். நன்றி.

    ReplyDelete
  3. //இறைவன் வெளியில் இல்லை; நம்முடைய இதயத்தின் அறைக்குள்தான் இருக்கின்றான் என்பதை உணர்ந்து அவன் நம்மை அழைப்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதே இந்த பாசுரத்தின் சாரம். //

    OK OK படங்களெல்லாம் சூப்பரோ சூப்பர். கலக்குகிறீர்கள் அண்ணா.

    இப்போதைக்கு பகுதி-98 + 99 வருகை தராமல் நிலுவையில் உள்ளன. இப்படியே விட்டால் அதில் நூறும் சேர்ந்து விடக்கூடும். அதனால் ....

    ReplyDelete