Thursday, December 19, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-5)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-5)


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை 
தூய பெருநீர் யமுனைத் துறைவனை 
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை 
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை 
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்செப்பேலோ ரெம்பாவாய் 
http://youtu.be/_bwPxMsRTuM

உயிர்களுக்கு பிறவி என்பது 
முற்பிறவிகளில் செய்த 
வினைகளால் உண்டாவது. 

வினைகளில் நல்வினையும்
தீவினைகளும் அடங்கும். 

நல்வினைகளினால் மகிழ்ச்சியான வாழ்வும், 
தீவினைகளினால் 
துன்பங்களும், சோகமும் நிறைந்த வாழ்வும் சித்திக்கும்.

வினைகள் செயலற்றவை. 
ஆனால் அதன் பயன்களை 
அனுபவிக்கச் செய்வது இறைவனே. 

ஒவ்வொரு பிறவியிலும் வினைகளின் 
பயன்களை அனுபவிப்பதும் 
மீண்டும் வினைகளை செய்வதும் 
தொடர்கதையாக இடைவிடாமல் 
நடந்துகொண்டே இருக்கிறது.

இந்த சுழலிலிருந்து விடுபடவேண்டுமானால் 
வினைகள் முழுவதையும் அனுபவித்து தீர்க்கவேண்டும் 
அத்தோடு நில்லாமல் புதிதாக வினைகளை 
சேர்த்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும்.

இவ்வுலகில் பிறந்தவர்கள் எந்த 
ஒரு கர்மங்களையும் செய்யாமல் இருக்க முடியாது.
ஏனென்றால் இது கர்ம பூமி. 

கர்மங்களை ஆற்றுவதை தவிர்க்க இயலாது. 
கர்மங்களை செய்தால் வினைகள் 
நம்மை பற்றத்தான் செய்யும்.

கர்ம வினைகள்.  நம்மை பற்றாமல் 
இருக்க செய்யும் மார்க்கம் என்ன?

அதை நமக்கு போதிக்கத்தான் 
கண்ணன் நமக்கு பகவத் கீதையை தந்தான் 

எந்த செயலைச்  செய்தாலும்
 தான் செய்கிறோம் என்ற எண்ணமின்றி செய்து 
அதன் பலனை அவனுக்கு அர்பணிக்க சொன்னான் 
அப்போது வினைகள் நம்மை பற்றாது என்றான். 

அவனை மறந்து உலக மோகத்தில் மூழ்கி  
கிடக்கும் நம்மை மாயையிலிருந்து 
விடுவிக்க வந்த மாயன் அவன்


வடமதுரையில் தூய  யமுனை நதிக்கரையில் 
ஆயர்குலத்தில் தோன்றிய மனித குலத்தின் 
மன இருளை அகற்ற வந்த ஜோதி அவன். 

பெற்ற தாயான தேவகிக்கு 
 பெருமை சேர்த்தவன் 


நம்மை அறியாமையில் வைத்திருக்கும் 
தமோ குணத்தை அழிக்க வந்த தாமோதரன் அவன் 

இவைகளையெல்லாம் நாம் சிந்தித்து,
அவன் திருவடிகளில் நல்ல மலர்களை அர்ச்சித்து ,
அவன் புகழை வாயினால் பாடி, மனதில் 
சிந்தித்து வந்தால் நாம் ஏற்கெனவே 
செய்த பிழைகளினால் விளைந்த  துன்பங்களும்
,பிழை செய்தமையால்  வந்த துன்பங்களும்
 தீயில் விழுந்த பொருட்கள் போல் எரிந்து 
சாம்பலாகி தூசுபோல் செயலற்றதாகிவிடும் 
என்பதை உணர்ந்து அவனை வழிபடுவாய் 
என்று என் சக தோழிகளிடம் ஆண்டாள் கூறுகிறாள் 
இந்த பாசுரத்தில் .

அது அவர்களுக்கு மட்டுமல்ல
 நமக்கும்கூடத்தான். 
.pic.courtesy-google images 

7 comments:

  1. //எந்த செயலைச் செய்தாலும் தான் செய்கிறோம் என்ற எண்ணமின்றி செய்து அதன் பலனை அவனுக்கு அர்பணிக்க சொன்னான் //

    காயே நவாசா ....... ஸமர்ப்பயாமி !

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாம் பலவிதங்களில் தவறு செய்கிறோம்.
      அதை கீழ்கண்ட சுலோகம் உணர்த்துகிறது.

      காயே-இந்த உடலால்
      ந வாசா -வாக்கினால்
      மனசே- manathinaal
      இந்திரியேவா -ஐம்புலன்களினால்
      புத்யாத்மனாவா- புத்தியாலோ
      ஸ்வக்ருதே ஸ்வபாவாத்- இந்த மனித இனத்திற்கு உரிய ச்வபாவத்தினாலொ
      நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் பரபம்மமாகிய நாராயணனே உன் திருவடிகளில் சமர்பிகின்றேன். நீதான் என்னை மன்னித்து காத்து அருளவேண்டும். .என்று தினமும் சொல்லிக்கொண்டே வந்தால் போதும் நாம் செய்யும் தவறும் சிறிது சிறிதாக குறைந்து விடும். நாரணனின் நாமம் நெஞ்சில் நின்று நம்மை காக்கும்

      Delete
  2. ’மாயனை மன்னு........

    ஆண்டாள் பாசுரம் அருமையோ அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. கர்ம வினைகள் பற்றாமல் இருக்க - விளக்கம் அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. Venugopal Krishnamoorthi
    Dec 19, 2013
    1

    திருப்பாவை பாடல் விளக்கத்தோடு,தற்கால வாழ்க்கையையும் ஒப்பிட்டு
    அதில் இருந்து மீளவும் வழியை சொல்லி உள்ளீர்கள்..
    நன்றி...படிப்பதோடு நில்லாமல் கடைபிடிக்காவும் முயல்கிறேன்.

    Pattabi Raman
    Dec 19, 2013
    1
    Edit

    நாம் பகவானின் நாமங்களை
    சொல்லிக்கொண்டே இருந்தால் போதும்.

    அது நம் மனதில் உள்ள அனைத்து
    எண்ணங்களையும் ஒவ்வொன்றாக
    வெளியேற்றிவிடும் என்பது சத்தியம்,

    இறுதியில் அவன் நாமம் மட்டும்
    எஞ்சி நிற்கும்

    .நம்பிக்கை இருந்தால் போதும்.

    அவன் திருக்கை காட்டும் திருப்பாதங்களை பற்றிகொண்டால் போதும்.

    எதுவும் நம்மை ஒன்றும் செய்யாது. 

    ReplyDelete