Friday, December 20, 2013

பட்டினத்தாரின் சிந்தனைகள் (3)

பட்டினத்தாரின் சிந்தனைகள் (3)




எல்லோரும் 
இறைவனை வணங்குகிறோம் 

பலவிதமாக 
பூஜைகளை செய்கின்றோம் 

சிலர் சில நிமிடங்களில் 
முடித்துவிடுகிறார்கள் 
சிலர் பலமணி நேரம் பூஜை செய்கிறார்கள். 

அப்படி செய்யப்படுகின்ற பூஜை 
முழுமையான ஈடுபாட்டோடு செய்யப்படுகிறதா
 என்பதுதான் கேள்வி?

மனம் மற்றும் அனைத்து புலன்களும், 
இந்த உடலும், பூஜையில் ஒன்றி,மெய்மறந்து 
போலியாக இல்லாமல் உண்மையாகவே
 பூஜை செய்கிறார்களா என்றால் இல்லை.

அவ்வாறு பூஜை செய்யும்போது  
மற்றவர்களால் இடையூறு இல்லாமல் 
செய்ய முடிகிறதா என்றாலும் இல்லை.

மற்றவர்கள் இடையூறு இல்லை,
நம்முடைய மனமும் உடலும் அதற்க்கு 
ஒத்துழைக்கிறதா என்றாலும் 
அதுவும் இல்லை.

எவ்வளவோ  
தடங்கல்கள்  

அதையெல்லாம் மீறி பூஜையை செய்வது 
ஒரு அரிதான செயலாகவே உள்ளது. 

கடமைகள் ஒருபுறம்,
கஷ்டங்கள் ஒரு புறம். 
காம குரோதம் முதலிய உணர்சிகளினால்
 மனதில் ஏற்ப்படும் மன உளைச்சல்கள்
 ஒரு பக்கம் நம்மை வாட்டி வதைக்கின்றன. 

இதை எல்லாம் மீறி நம் மனதை
ஒருமுகப்படுவது என்பது 
குதிரைக்கொம்பாகவே உள்ளது. 

ஒருவன் அவனவனுக்கு என ஏற்பட்ட 
கடமைகளை முறையாகச் செய்யாவிடில்
மனம் என்றும் ஒருமைப்படாது.

ஒருவன் மனதில் பிறருக்கு தீமை 
செய்ய வேண்டி திட்டம் 
தீட்டிக்கொண்டிருந்தால் மனம் ஒருமைப்படாது.

ஒருவன்பிறர் தனக்கு   செய்த தீவினைகளை பற்றியே 
நினைத்துக்கொண்டிருந்தாலும்
மனம் ஒருமைப்படாது 

தான் என்று அகந்தை கொண்டு 
பிறர் மீது அன்பில்லாமல் ஆதிக்கம் 
செலுத்தும் நோக்கத்துடனேயே 
சிந்தித்துக் கொண்டிருந்தாலும் 
 மனம் ஒருமைப்படாது. 

பிறர் நம்மை புகழ வேண்டும் 
என்று நாம் எதிர்பார்ப்புக்களை 
வைத்துக் கொண்டிருந்தாலும்
மனம்  ஒருமைப்படாது.

எப்போதும் காசு சேர்ப்பதிலேயே குறியாய் இருந்தாலும், 
அதிகமாக அளவிற்கு மீறி காசு சேர்த்தாலும் 
மனதில் அமைதி இருக்காது. 
ஆணவம்தான்  மேலிடும். 
அதோடு பயமும் 
அதன் கூட சேர்ந்துகொண்டு
 நம் அமைதியை பலி வாங்கும்.

தவறுகள் செய்தால் ,
பிறர் நிம்மதியை கெடுத்தால் 
அதன் விளைவுகள் நம்மை 
அமைதியாய் இருக்க விடாது. 

எல்லாம் இருந்தும் மனம் 
எதையோ தேடித்தான் அலையும். 

அதுதான் இறைவனின் திருவடிகள்

அதை அடையும் வரை இவ்வுலகில் 
எந்த இன்பமும் நிலைக்காது.
 நிலையான மகிழ்ச்சியைத் தராது 
என்பதை உணரும்போதுதான் 
மனம் இறைவனை நோக்கி 
தன்  நாட்டத்தை செலுத்தும் 

அதுவரை கீழே கண்டுள்ள பட்டினத்தாரின்
பாடல்களில் உள்ள வரிகளை 
போல்தான் நம் பூஜை இருக்கும். 

கண்ணுண்டு காணக், கருத்துண்டு நோக்கக், கசிந்துருகிப்
பண்ணுண்டு பாடச், செவியுண்டு கேட்கப், பல் பச்சிலையால்
எண்ணுண்டு சாத்த, எதிர் நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுது ஐயோ கெடுவீர் இந்த மானுடமே! 2.

5 comments:

  1. பாடல் சிறப்பு ஐயா...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பாடலும், பதிவும், கருத்துக்களும் சிந்திக்க வைத்தன. அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிந்தியுங்கள் சித்தம் தெளியும்
      சித்தம் தெளிய மருந்தும் புலப்படும்
      நன்றி VGK

      Delete
  3. மனம் ஒருமைப்பட எப்படி இருக்கவேண்டுமென்பதனை உணர்த்தும் உன்னத பகிர்வு! மனம் செம்மைப்படவும், செம்மைப்பட்டு செய்யும் பரிபூரண பூசையின் மேன்மையையும் உணர்த்தும் பகிர்வு! மானுடம் செம்மையாய் வாழவும், வலியுறுத்தும் பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. பட்டினத்தாரை கண்டால்
      அனைவரும் அலறி ஓடுகிறார்கள்

      அவர் இவ்வுலக வாழ்வையும்
      இன்பங்களையும் வெறுத்து ஒதுக்கியவர்
      என்றும் பெண்களை இழிவுபடுத்துபவர்
      என்றும் ஒரு தவறான கருத்தை
      உலக மோகத்தில் சிக்கியவர்கள்
      பரப்பி விட்டனர்.

      ஆனால் வாழ்வியல் உண்மைகளை,
      இந்த உலகின் நிலையாமையை,
      இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கத்தை
      அழகுதமிழில், எளிய தமிழில் அளித்துள்ள
      அந்த சித்தர் பெருமானை பற்றி
      இவன் புரிந்துகொண்ட வகையில்
      அந்த மகானின் அருள் துணையைக் கோரி
      எழுதப் புகுந்துள்ளேன்
      ஞானமில்லா இந்த சிறியேன்.

      Delete